ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் பொருளாதாரக் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளில் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றக் காவலில் திஹார் சிறைக்கு அனுப்பப் பட்டார்.
இந்நிலையில், இந்த ஊழல் வழக்குகளில் அதிகம் ஈடுபாடு காட்டி, தண்டனை பெற்றுத் தருவேன் என்று வெகு காலமாக கூறிக் கொண்டிருந்த பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியம் சுவாமி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பி.சி., மற்றும் பல கிரிமினல்கள், வேறு பல வழக்குகளில் போலீஸ் வேனில் அமர்ந்து செல்லும் அனைத்துப் பாதையுமே திஹாருக்குத்தான்.. என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ப.சிதம்பரம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பும் பின்பும், திஹார் சிறையில் நேரம் கழிப்பார் என்று கூறியிருந்தார்.
ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை, பப்பா சோர், பேட்டா சோர் என்று, தந்தை திருடன், மகன் திருடன் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு வந்தார் சுப்பிரமணியம் சுவாமி.