தமிழகத்தில் ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளின் நபர்கள் தயாரித்து விற்கும் மது பாட்டில்களை வாங்கி, சில்லறைக்கு விற்பனை செய்து வரும் அரசின் டாஸ்மாக் கடைகளால் இளைய சமுதாயம் பெரும் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே உண்டு.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முழு கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் கேரளமும் விதிவிலக்காக இருக்கவில்லை!
மது குடித்தல் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடு என்று பிரசாரம் மட்டுமே செய்து வருகின்றனர். ஆனால், அதற்கு முன் மதுவையும் நீட்டி விடுகின்றனர். மது குடித்தால் சிறுமூளை செயலிழந்து விடும் என்றும், தன்னுணர்வு இழந்த நிலையில், மனிதன் குற்றச் செயல்களைப் புரிகிறான் என்றும் அறிவியல் ரீதியாகக் கூறப் படுகிறது. ஆனாலும், மது குடிப்போர் தமிழகம், புதுவை மற்றும் கேரளத்தில் அதிகரித்தே வருகின்றனர்.
கேரளத்தில் மது வாங்க பணம் கேட்டு, தனது தந்தையை மகன் ஒருவர் அடித்து, மிதித்து கீழே தள்ளி தாக்கும் வீடியோ ஒன்று டிவிட்டர் பதிவுகளில் வைரலாகி வருகிறது. தனது தாயின் கண் முன்பே தந்தையை அடிக்கும் மகனின் செயலைக் கண்டு, டிவிட்டர் வாசிகள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மாநிலத்துக்கு பெருமளவிலான வருவாய் மது விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கும் போது, அரசுகளும் இது போன்ற சம்பவங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப் படுகிறது. கேரள அரசு, தாங்கள் கொடுத்த உறுதிமொழியின் படி மாநிலத்தில் மது விற்பனையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றனர் சமூக ஆர்வலர்கள். இளைய சமுதாயம் முன்னேற வேண்டுமானால், மது விற்பனையை கட்டுப் படுத்த வேண்டும் என்கின்றனர்.