
தில்லியில் பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்து கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி.

தில்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் இருக்கும் குஜராத்தி சமாஜ் பவன் பகுதியில் இவர் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தில்லி வந்திருந்தார்.

இன்று மாலை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு செல்லும் விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த தமயந்தி, சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வதற்காக வடக்கு தில்லியில் உள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வந்தார்.

காலை 7 மணியளவில் ஆட்டோவில் இருந்து இறங்கியபோது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த இருவர் தமயந்தி கையில் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.

அந்த பையில் தனது கைபேசி, பணம் மற்றும் சில முக்கியமான ஆவணங்கள் இருந்ததாக குறிப்பிட்டு தில்லி காவல்துறையிடம் தமயந்தி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



