தகவலறியும் உரிமைச் சட்டத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. .
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தின் போது, தகவலறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் – 2005 கொண்டு வரப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில், இந்த சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, அரசு துறைகள், அவற்றின் செயல்பாடுகள், திட்டங்கள், செலவினக் கணக்குகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து யார் வேண்டுமானாலும் மனு அளித்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த தகவல்களை வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியே தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில், மத்திய, மாநில தலைமைத் தகவல் ஆணையர்கள் மற்றும் தகவல் அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம் உள்ளிட்டவற்றை மத்திய அரசே நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டது.
இது, தலைமை தகவல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்தச் சூழலில், ஆர்டிஐ சட்டத்தில் சில புதிய விதிமுறைகளை மத்திய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, தலைமைத் தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தலைமை தகவல் ஆணையரின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.