
கோவாவில் நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து இந்த விருதினை வழங்கினர்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28 ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தலைமையில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினி காந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்த திரைப்படக் கலைஞர்களுக்கு மரியாதை செய்ய திட்டமிட்ட மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளையும் அறிவித்தது.

அதன்படி, 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கௌரவ விருதான “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து இந்த விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினர்.
அதன் பின் ரஜினிகாந்த் பேசியபோது: “ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கௌரவித்த இந்திய அரசுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

மேலும் அவர் “என்னை வாழ தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி! ஜெய்ஹிந்த்!!” என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி முடித்தார்.