செவ்வாய்க்கிழமை அன்று, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் ‘பதானி உடை’ அணிய முயன்ற ஒரு தலித் நபரைத் தாக்கியதாக முஸ்லிம்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காந்திதாமில் உள்ள கிரீன் பேலஸ் ஹோட்டல் அருகே நவம்பர் 26 அன்று மதியம் 27 வயதான ‘ஜெயந்தி பட்டி’ என்பவரை அடித்து உதைத்ததாக காவல்துறை அதிகாரிகள் அம்ஜத் பதான் மற்றும் அஸ்கர் பதான் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயந்தி பட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் லாரி ஓட்டுநராக பணிபுரிவதும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு காரணமாகிவிட்டது.
பட்டி ஒரு ஹோட்டலுக்கு அருகில் தேநீர் அருந்தியதாகக் கூறப்படுகிறது! அந்த நேரத்தில் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அவரை நோக்கி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டியிடம் அவர் ஏன் ‘பதானி’ சூட் அணிந்திருந்தார் என்று அவர்கள் கேட்டனர்.
கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பின்னால் இருந்து ‘பதானி’ உடையைத் தூக்கி பட்டியின் முகத்தை மூடினார், தொடர்ந்து இருவரும் அவரைத் தாக்கினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியை தாழ்த்திய சாதியைச் சேர்ந்தவர் என்றும், அதனால் அவர் ‘பதானி’ உடையை அணியக்கூடாது என்றும் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பட்டி மீண்டும் உடையை அணிந்து வருவதைப் பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என்று அவர்கள் மேலும் மிரட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதே நாளில் ஜெயந்தி பட்டி, காந்திதாம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, தனது தொழிலுக்குக் கிளம்பிவிட்டார்.
இதை அடுத்து, எஸ்சி / எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை உள்ளூர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாக வெளியிடுள்ளது.