ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் தற்போது மாற்றம் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே வீட்டு, வாகன கடன்களிலும் எந்த மாற்றமும் இருக்காது!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப் படும்.
இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே இருந்த 5.15 % வட்டி விகிதம் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு மற்ற வங்கிகள் அளிக்கும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 % ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த முறை நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 0.25% குறைக்கப் பட்டு, 5.15 சதவீதம் என அறிவிக்கப் பட்டது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரெப்போ விகிதம் தொடர்ந்து 5 முறை சேர்த்து 1.35% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது.