நீர்வழித் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: கட்கரி

Published:

நாட்டில் நீர்வழிப் போக்குவரத்துத் தடங்களை மேம்படுத்த ரூ.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தெலங்கானா மாநில கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற சாலைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அப்போது, நாட்டில் நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 101 ஆறுகளை நீர்வழித் தடங்களாக மாற்ற வகை செய்யும் மசோதா இந்த மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். அதன் பின்னர், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திய அரசின் மற்றொரு முக்கியத் திட்டமான 5 நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நீர்வழித் தடங்களில் ஒன்றான வாராணசி – ஹல்தியா இடையேயான 1,620 கிலோ மீட்டர் நீளமுடைய நீர்வழித் தடத்தை மேம்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்றார் நிதின் கட்கரி.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img