வாரிசு அரசியல் என தனது மகன் ஆதித்யாவைக் கொண்டு வந்த உத்தவ் தாக்கரே, தற்போது வாரிசு பத்திரிகையியல் என தனது மனைவி ராஷ்மியைக் கொண்டு வந்திருக்கிறார். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ நாளிதழ் ஆசிரியராக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
மராத்தி நாளிதழ் சாம்னா, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையாக 1988 முதல் வெளியாகி வருகிறது. இதன் ஹிந்தி பதிப்பும் தொடங்கப் பட்டது.
சிவசேனா நிறுவனரான பால் தாக்கரே இதன் நிறுவனராகவும் ஆசிரியராகவும் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே அதன் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்குப் பின், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், சாம்னா பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அந்த நிலையில், சிவசேனா மூத்த எம்.பி., சஞ்சய் ராவத் அதன் நிர்வாகஆசிரியராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி (54) தற்போது சாம்னா பத்திரிகை குழுமத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் இது குறித்து சிலர் கருத்து தெரிவித்த போது அரசியல் கட்சியினர், பத்திரிகையோ, ‘டிவி’ சேனலோ தொடங்கினால், அவற்றின் முக்கிய பொறுப்புகளை, அந்தச் கட்சி தலைவரின் குடும்பத்தினரிடம் கொடுப்பது வழக்கமானது தான் என்று கூறினர்.