ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கொடுத்தது.
அதன் படி, ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அதன் பின்னர் ஆபாசப் படம் பார்ப்பது தொடர்பாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கெல்லாம் காவல் துறை கைது செய்யுமா என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டது ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்பவர்களைப் பீதி அடையச் செய்தது.
இது மட்டுமில்லாமல் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வந்தனர். இதனையடுத்து மீண்டும் 600 பேர் கொண்ட லிஸ்டை ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் முகவரியை வைத்து போலீசார் தயார் செய்தனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம் பேட்டையில் வசித்து வரும் நியாஸ் என்ற நபர் இணையதளத்தில் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.