கொல்லம்:
கடந்த ஏழெட்டு அண்டுகளாக பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை 21 வயது இளம்பெண் ஒருவர் அறுத்துவீசினார். இந்தச் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பன்மனா ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் கணேசானந்தா, திருவனந்தபுரம் அருகே உள்ள பேட்டா என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை நேற்றிரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றபோது, அந்தப் பெண், சாமியாரின் ஆண் உறுப்பை அறுத்துள்ளார்.
ரத்தம் பீறிடவே, சாமியாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில், சாமியார் இளம்பெண்ணின் வீட்டுக்கு நீண்ட காலமாக வந்து செல்பவர் என்றும், இளம்பெண் 16 வயது சிறுமியாக இருந்தபோதிலிருந்தே, அவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக அந்தப் பெண்ணிடம் சாமியார் பல முறை அத்துமீறியிருப்பதும், இளம்பெண்ணின் தாயாரும் அந்த சாமியாருக்கு உடந்தை என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
சாமியாருக்கும் அந்தப் பெண்ணின் தாயாருக்கும் பழக்கம் இருந்ததும், தாயாரைப் பார்க்க வந்த சாக்கில் பெண்ணிடமும் சபலப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண்ணை 16 வயதில் இருந்தே வன் கொடுமைக்கு ஆளாக்கியதால், சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் சாமியார் மீதும் இளம்பெண்ணின் தாயார் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இந்தச் சம்பவத்தைக் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினரயி விஜயன், அந்தப் பெண்ணின் செயல் மிகவும் தைரியமான செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.