புது தில்லி:
பாஜக., இன்னும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று கூறிய அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை ஆளும் தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கலாம் என்ற சிவசேனாவின் கருத்தை நிராகரித்தார். காஷ்மீர் விவகாரம், காங்கிரஸ் எதிர்ப்பு, நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணிக்குத் திரும்பல் உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கு பதிலளித்த பாஜக தலைவர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இன்று ஆஜ் தக் இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற வாரத்தின் ஹைலைட், தமிழக ஊடகங்களில் ரஜினிகாந்த் தான்! ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது அரசியல் கருத்துகளைப் பேசி, ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தார். ஸ்டாலினைப் பாராட்டினார், ஆனால் ஊழலை எதிர்ப்பேன், சிஸ்டம் சரியில்லை என்று ஏதோ சொன்னார்.
ஆன்மிகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ள ரஜினி காந்த் திடீரென கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு பெரியாரிஸம் பேசியது ஏன் என்றும் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களும் விமர்சனங்களும் அதிகம் முன்வைக்கப்பட்டன. ரஜினி பாஜகவுக்கு வந்தால் வரவேற்பதாக, தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது, சுப்பிரமணியசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், திடீரென ரஜினி அரசியலுக்கு வருவதை ஆண்டவன்தான் முடிவு செய்வான் என்று வழக்கம்போல் நழுவினார்.
இந்நிலையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், ஆஜ் தக் இந்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு அவர் கையில் உள்ளது. நல்ல மனிதர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைப்பது பாஜக., எனவே இதை வரவேற்கிறோம் என்று, ரஜினிக்கு பாஜகவில் சேர நேரடி அழைப்பு விடுத்தார். அமித்ஷாவின் இந்த மனம் திறந்த அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சென்ற வருடம் தேர்தல் நேரத்தில் ரஜினியை வைத்து பாஜக., களம் காண முயன்றது. அப்போது ஜெயலலிதா இருந்தார். மோடி, ரஜினிகாந்த்தின் வீட்டுக்கே சென்று பார்த்து பேசிவிட்டு வந்தார். அப்போதெல்லாம், அது ஒரு சாதாரண சந்திப்பு, வெறும் நலம் விசாரிப்புதான் என்று, தனது பிடியை விட்டுக் கொடுக்காமல் நழுவினார் ரஜினி காந்த். எனவே, அமித் ஷாவின் அழைப்பும் ஒரு பரபரப்பான அரசியல் சூழலாகத்தான் தோற்றுவிக்குமே தவிர பெரிய மாற்றங்களை ஒன்றும் தந்துவிடாது என்று நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த், இதனாலேயே சென்னை வந்த போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று அவரது வீட்டிலேயே பார்த்து விட்டு வந்தார் மோடிஜி. இந்நிலையில் பாஜகவில் இருந்து அதன் தேசியத் தலைவர் அமித்ஷா விடுத்திருக்கும் ஓபன் அழைப்பை ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே இனி வரும் அரசியல் பரபரப்புகளாக இருக்கும்