நாடு முழுவதும் மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தி ஏஜென்ஸி நிறுவனம் வெளியிட்ட தகவலில், நாடு தழுவிய ஊரடங்கை, மேலும் நீட்டிக்க மத்திய அரசு யோசனை செய்து வருகிறது. மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து, மத்திய அரசு இந்த யோசனையை மேற்கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் வைரஸ் தொற்றான கொரோனா தொற்றால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா பரவல் சமூகப் பரவலாக மாறி பெருமளவு மக்களை பாதித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், நாடு முழுதும் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. கடந்த மார்ச் 21ஆம் தேதி மக்கள் ஊடரங்கு என்பதை பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் ஒரு நாள் மட்டும் அல்லாது, தொடர்ந்து, மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, வெளியில் நடமாடாமல் வீடுகளுக்குள்ளேயே தனித்திருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து, நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், நாடு தழுவிய ஊரடங்கு தற்போது இருந்து வருகிறது. அரசு அறிவித்த 21 நாள் முழு ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி நிறைவடையும். ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று, மகாராஷ்டிரா, தெலங்காணா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.
21 நாள் ஊரடங்கு முடிந்த பின்னர் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர். மக்கள் கூட்டமாகத் திரண்டு தெருக்களில் இறங்கினால் கொரோனா பரவல் கட்டுப் படுத்தல் இயலாததாகிவிடும் என்று கூறுகின்றனர். இதையே பல மாநிலங்களும் கூறுவதால், ஊரடங்கு நிலை நீட்டிப்பு குறித்து மத்திய அரசு யோசனை செய்து வருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.