பொதுவாக கொரோனா தொற்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் பரவி வருகிறது. இந்தியாவில் சமூகப் பரவல் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் கர்நாடகாவில் குறைந்தது 10 பேருக்கு கொரோனா தொற்று நோய் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளதாம். அவர்கள் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை, வெளிநாடுகளுக்கு சென்றவர்களுடனும் தொடர்பில் இருந்தது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடனும் எந்த தொடர்பும் அவர்கள் வைத்திருக்கவும் இல்லை.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த நபர்களுடனும் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இப்படியான நிலையில் 10 பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்பது குறித்து மருத்துவர்கள் குழம்பி வருகின்றனர். பெங்களூரு, கடக், மைசூரு, பாகல்கோட், பெங்களூரு புறநகர், பெல்லாரி ஆகிய பகுதிகளில் இப்படியான விடைதெரியாத வினாக்களோடு சில நோயாளிகள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இவர்களுக்கு கொரோனா எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.