கொரோனா அச்சுறுத்தல் சூழலில், நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம், வகுப்புகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களோ, மார்ச் 16ஆம் தேதி முதலே மூடிக் கிடக்கின்றன. தேர்வுகள் சில நடந்தும் நடக்காமலும் அப்படியே ஒத்தி வைக்கப் பட்டன.
இந்த நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் லாக்டவுன் காரணமாக இப்போதும் கல்வி நிறுவனங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானிய குழு -யுசிஜி ஆய்வுக் குழுக்களை உருவாக்கி இருந்தது. இந்த ஆய்வுக் குழு தனது பரிந்துரையை கடந்த வாரம் யுஜிசி.,யிடம் சமர்ப்பித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் யுசிஜி இது தொடர்பாக முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம். தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் தொடங்க வேண்டும், புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இடைநிலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு செமஸ்டர்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இன்டெர்னல் மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் சூழ்நிலை சரியாக இருந்தால் தேர்வுகளை ஜூலை மாதமே நடத்திக் கொள்ளலாம்.
வாரத்துக்கு 6 நாட்கள் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதேபோல் மாணவர்கள், ஆசிரியர்களின் டிராவல் ஹிஸ்டரியை கல்வி நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆய்வுப் படிப்புகளுக்கான தேர்வுகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும், இணையம் மூலமும் நடத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களை வகுத்து முடிவுகளை எடுக்கலாம் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.