
பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் (71) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் கடந்த மாதம் 17 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. ஆனால் அவர் வியாழக்கிழமை இரவு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு வயது 71.
‘மாஸ்டர்ஜி’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சரோஜ் கான் தனது நீண்ட கால கலை வாழ்க்கையில் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். குறிப்பாக நடிகைகள் மாதுரி தீட்சித் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருக்கு ஏராளமான பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
1948 இல் பிறந்த சரோஜ் கான் தனது 3 வயதில் குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1950-களில் ஒரு பின்னணி நடனக் கலைஞராக நடன இயக்குனர் பி சோஹன்லாலுடன் பணிபுரிந்தார்.
கீதா மேரா நாம் (1974) படத்தில் நடன இயக்குனராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் 80 மற்றும் 90 களில் ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோருடன் பணிபுரிந்தபோதுதான் அவரது வாழ்க்கை புதிய உயரங்களைத் தொட்டது. மிஸ்டர் இந்தியா (1987), நாகினா (1986), சாந்தினி (1989), தேசாப் (1988), மற்றும் தானேதார் (1990) உள்ளிட்ட படங்களில் அவர் நடனம் அமைத்த சில மறக்கமுடியாத பாடல்கள் உள்ளன. கடைசியாக அவர் மீண்டும் மாதுரி தீட்சித் உடன் கலங்கு (2018) படத்தில் பணிபுரிந்தார்.

ஹவா ஹவாய், சாந்தினி, தமா தம்மா, ஏக் டோ டீன், டோலா ரீ டோலா மற்றும் தக் தக் கர்னே லாகா ஆகிய பாடல்கள் அவரது நடனங்கள் இன்றுவரை நினைவுகூறப்படுகின்றன. 2005-2010 காலக்க்கட்டத்தில் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராகவும் பணியாற்றினார்.
தேவதாஸ், ஜப் வீ மெட், சிருங்காரம் உள்ளிட்ட படங்களில் நடனம் அமைத்து 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
சரோஜ் கானுக்கு இரண்டு மகள்கள் மறும் ஒரு மகன் உள்ளனர்.


