புதுதில்லி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23ஆம் தேதி தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதற்கான அறிகுறிகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், இந்நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் பிரியங்காவின் உடல்நிலை தேறி வருவதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், கேரளா, தில்லி ஆகிய மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. தில்லியில் மலேரியா, சிக்கன் குன்யா, டெங்கு ஆகிய தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகிறது.
ஆக.20 வரை மட்டும் 150க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி நிலவரப்படி டெல்லியில் உள்ள 412 பேர் மலேரியா நோயாலும், 311 பேர் சிக்குன் குன்யா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.