கணேஷா- அடுத்த வருஷம் சீக்கிரம் வாருங்கள்!!
* செய்திக் கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்
மஹாராஷ்டிராவில் சதுர்த்தி அன்று தொடங்கிய பத்து நாள் கணபதி உற்சவம் சிறப்பாக நடைப்பெற்று இன்று அனந்த சதுர்தஷியுடன் அருமையாய் முடிவடைகிறது.
கோவில்களிலும் கணபதி உற்சவம் கொண்டாடப் பட்டு இன்று முடிவடைகிறது. நாக்பூர்-வர்தா சாலையில் கேள்சர் (Kelzar) என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலிலும் இந்த ஆண்டு மாநில அரசாணைப் படி கணபதி உற்சவம் கொண்டாடப் பட்டது.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, மிகவும் புராதனமான ‘ஏக்சக்ரா’ என்றழைக்கப்பட்ட இந்த இடத்தைப் பற்றி வசிஷ்டப் புராணத்திலும், மாகாபாரதத்திலும் குறிப்புகள் உள்ளன. வசிஷ்ட புராணத்தின் படி, இராமனின் குருவான வசிஷ்டர், இங்கு வந்தபோது அவருடைய நித்திய அனுஷ்டானத்திற்க்காக இங்கு ஒரு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அப்போது வடிவமைக்கப்பட்ட கணபதி ‘வரத் விநாயக்’ என்றழைக்கப்பட்டார். இராமப்பிரபுவின் அவதாரத்துக்குப் பிறகு வசிஷ்டர் ‘ ஏக்சக்ர நகர’த்திலிருந்து புறப்பட்டு விட்டதாக புராணங்கள் கூறுகின்றனர்.
மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள், பகாசுரன் என்னும் அரக்கனை இங்கே தான் வதம் செய்தனர் என்று இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது.
இயற்கையை கொஞ்சும் அழகிய குன்றின் மேல் சித்தி விநாயகர் பக்தர்களுக்காக அருள் பாலித்து கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல பிரதேசத்தில் இருந்தும் பல்லாயிரக்காண மக்கள் ஸ்ரீ சித்தி விநாயகரை தரிசிக்க வருவதாக கூறுகின்றனர், உள்ளூர் மக்கள்.
கொரானா காலத்தில் பெரும்பாலான மக்களும் கணபதி சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடி, கணபதி சிலையை வீட்டிலேயே விசர்ஜனம் செய்கின்றனர்.
சம்பந்தப்பட்ட துறைகளும் பொது விசர்ஜனுக்காக நீர் நிலைகளுக்கு அருகிலேயே தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன. செயற்கை தண்ணீர் டாங்குகள் நீர்நிலைகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கணபதி பெருமானுக்கு பிரியாவிடை கொடுக்கின்றனர்.
கணபதி பப்பா ( Bappa) மோரியா!! அடுத்த வருடம் சீக்கிரம் வாருங்கள்!! – என்று உணர்ச்சிப் பொங்க கணபதிக்கு வழியனுப்புகின்றனர், பக்த கோடிகள்!!
சிறு குழந்தைகள், “கணபதி பப்பா, அவங்க அம்மாகிட்டே போகிறார்” – என மழலை மராட்டியில் கூறுவது காதுக்கு இதம். கணபதி பப்பா பக்தர்களின் பக்திக்கு இணங்கி, சங்கடங்களைப் போக்குவார் என்னும் நம்பிக்கையே, கணபதி உற்சவம் கொடுத்த வரம்.
கணபதி பப்பா மோரியா!!