ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன், அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களுடன் வரிசையில் நின்று பங்கேற்றார். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நிவாய் தொகுதி எம்எல்ஏ., ஹீரா லால் வர்மா தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மகன் ஹன்ஸ்ராஜ் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ராஜஸ்தான் மாநில விவசாயத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தார். தன் மகன் ஹன்ஸ்ராஜை, அந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு எம்எல்ஏ வர்மா அனுப்பி வைத்துள்ளார். அவரும், அஜ்மீரில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் வேலைக்கான நேர்காணலில் பங்கேற்க மற்றவர்களுடன் வரிசையில் நின்றார். இது குறித்து வர்மா கூறியது… எனது மகன் குறைந்த படிப்பே முடித்துள்ளான். பத்தாம் வகுப்புகூட தாண்டவில்லை. எனவே அவனுக்கு அலுவலக உதவியாளர் வேலைதான் சரியாக இருக்கும். அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. இப்போது எனது மகன், ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறான். மாதம் ரூ 5 ஆயிரம் சம்பளமாகக் கிடைக்கிறது. என் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இது வழக்கத்துக்கு மாறான ஒரு செயல்தான். ஆனால், இதில் ஒன்றும் தவறு இல்லையே என நான் அவர்களிடம் கூறிவிட்டேன். இப்படி நடந்து கொள்வது, நேர்மையாக வாழ வழியைக் காட்டும். தவறான வழியில் சம்பாதித்து வசதியாக வாழ்வதற்கு, எனது பிள்ளைகளை நான் ஊக்கப்படுத்த மாட்டேன். நேர்முகத் தேர்வை எனது மகன் சிறப்பாக எதிர்கொண்டுள்ளான். தகுதி அடிப்படையில் மட்டுமே அவனுக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 3 பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். சமூக நலத்துறை துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். மக்களுக்கு என்னால் இயன்ற வரையில் நேர்மையாக பணியாற்றுவேன்… என்று கூறுகிறார் வர்மா.
அலுவலக உதவியாளர் வேலைக்கு வரிசையில் நின்ற பாஜக எம்.எல்.ஏ. மகன்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

