திருமலை திருப்பதி மலையப்ப ஸ்வாமி திருக்கோவிலில் வருடாந்திர புரட்டாசி மாத பிரம்மோத்ஸவம் நேற்று மாலை தொடங்கியது. சனிக்கிழமை மாலை 6.03 மணி முதல் 6.30 வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இந்த பிரம்மோத்ஸவம் அடுத்து வரும் 9 நாட்கள், செப்.27ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் வழக்கமான கொண்டாட்டங்கள் உற்சாகங்கள் எதுவும் இந்த வருடம் இருக்காது!
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோத்ஸவம் ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மகாவிஷ்ணு வேங்கடவனாக அவதரித்து திருப்பதி மலையில் எழுந்தருளிய பின் முதன் முதலில் பிரம்மா ஏழுமலையானுக்கு ஒன்பது நாட்கள் உத்ஸவம் நடத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த வகையில், இது பிரம்மோத்ஸவம் ஆகிறது.
பிற்காலத்தில் மாதந்தோறும் திருப்பதி மலையில் பிரமோத்ஸவம் நடைபெற்றதாக தல புராணம் குறிப்பிடுகிறது. அதன்பின் ஏற்பட்ட கால மாற்றங்களால், ஆண்டுக்கு ஒரு முறை வருடாந்திர பிரம்மோத்ஸவம் நடத்தப்படுகிறது. மேலும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் பிரம்மோத்ஸவம் நடத்தப்படுவது வழக்கமாகிப் போனது..
தற்போது புரட்டாசி மாத வருடாந்திர பிரம்மோத்ஸவம் நேற்று தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது. மேலும், நவராத்திரி பிரம்மோத்ஸவமும் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
வழக்கமாக பிரமோத்ஸவ காலத்தில் வெவ்வேறு வாகனங்கள் திருவீதியுலா வரும் வேங்கடவன் மலையப்பஸ்வாமி, திருக்கோயில் மாட வீதிகளில் கம்பீரமாக வலம் வருவார். ஆனால் இந்த முறை அது இருக்காது. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாதபடி, கொரோனா தொற்று காரணமாக இந்த வருட பிரமோத்ஸவம் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே மாட வீதிகளில் திருவீதி உலா இருக்காது.
தற்போது பிரம்மோத்ஸவ நாட்களில், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து உடன் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவார்கள். எனவே பிரம்மோத்ஸவ நாட்களில் வழக்கமாக திருப்பதி மலையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை இந்த முறை காண இயலாது.
பிரம்மோத்ஸவ ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோவில், கண்கவர் வகையில் வண்ண மின்விளக்குகள், பல்வேறு வகையான மலர்கள், காய்கனிகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
இந்த பிரம்மோத்ஸவத்துக்கான கொடியேற்றம், நேற்று மாலை மணி 6.03 முதல் 6.30 வரை மீன லக்னத்தில் நடைபெற்றது. ஏழுமலையான் கோவில் தங்க கொடிமரத்தில் கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர். இதை அடுத்து இரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.