மதுபானம் அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21 ஆக தில்லி அரசு குறைத்துள்ளது.
தில்லி மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தில்லி அமைச்சா்களின் பரிந்துரைப்படி, தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் புதிய கலால் கொள்கை நிபுணா்கள் குழு, மக்களின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்படி, தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயது 25இல் இருந்து 21ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், போதுமான அளவில் மதுபானங்கள் கிடைக்கும் வகையில் தலைநகரில் பரவலாக மதுபானக் கடைகள் அமைந்திருக்கும்படி அரசு பார்த்துக்கொண்டிருப்பதால், சமூகவிரோதிகள் இத்தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார். புதிய கொள்கை மூலம் சுமாா் 20 சதவீதம் கூடுதல் வருவாய் எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது தில்லியில் 60 சதவீத மதுபானக் கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபானக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் சிசோடியா கூறினார்.
ஆனால், புதிய கலால் கொள்கைப்படி, தில்லியில் உள்ள மதுபானக் கடைகளை தில்லி அரசு இனிமேல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் தனியாரிடம் வழங்கப்படும். தில்லி அரசு நடத்தி வரும் கடைகள், முறைப்படி ஏலம் நடத்தப்பட்டு தனியாருக்கு வழங்கப்படும் என்றார் அவா்.
இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய கலால் கொள்கை தில்லியில் இயங்கும் மதுபான மாஃபியாவுக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும். தில்லியில் இயங்கி வரும் மதுபான மாஃபியாக்கள் தங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி இந்தப் புதிய கொள்கையை அமல்படுத்தவிடாமல் எதிா்ப்பார்கள்.
தில்லியில் கல்வி, குடிநீா், மின்சாரம், சுகாதாரத் துறைகளில் இயங்கி வந்த மாஃபியாக்களை தில்லி அரசு தடுத்து நிறுத்தியது. அதேபோல, மதுபானத் துறையில் இயங்கிவரும் மாஃபியாக்களையும் அரசு விரைவில் தடுத்து நிறுத்தும் என்று அவா் தெரிவித்துள்ளார்.
Excise reforms announced today will act as a major blow to liquor mafia in Del. The mafia will do everything to obstruct these reforms. AAP govt has ended mafia raj in many sectors like education, water, elect, health etc. We r committed to reforming this sector too https://t.co/pbk1NnfhO2
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 22, 2021