மும்பையில் தன் காதலனுடன் சுற்றியதைக் கண்டித்த அண்ணன் மீது இருவருடம் முன் சிறுமி பாலியல் புகார் அளித்தார். இதில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் இருந்த இளைஞர் மீதான புகார் பொய் என தெரிய வந்ததால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தன் 24 வயது சகோதரன் தன்னை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2019ல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து தன் பெற்றோரிடம் கூறியும் அவர்கள் சகோதரனை கண்டிக்க மட்டுமே செய்ததால் தானே போலீசில் வந்து புகார் செய்ததாகத் தெரிவித்தார் அந்தச் சிறுமி.
அவர் கூறியதை உண்மை என்று நம்பிய போலிஸார், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். ‘போக்சோ’ வழக்கு என்பதால் அவரது ஜாமீன் மனுவும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜரான அந்தச் சிறுமி, தன் சகோதரன் மீது தான் பொய்யாகப் புகார் அளித்ததாக வாக்குமூலம் அளித்தார். தான் தனது காதலனுடன் சுற்றுவதை அண்ணன் கண்டித்ததால், அவருக்கு எதிராக பொய்யாகப் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் பாலியல் பலாத்காரத்திற்கு, சிறுமியின் புகாரைத் தவிர வேறு சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், வழக்கைத் தொடர்வது தேவையற்றது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த இளைஞரை விடுவித்தது.