இந்தியாவில் மராட்டியம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2 மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது, கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி 1000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தடுப்பு நடவடிக்கைகயை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஹரியானா, உ.பி ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து அண்டை மாநிலங்களில் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியமாகும்.தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கி கொள்ளப்படவில்லை.டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது.வட மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்து மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.





