ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த திருமணமான பெண் (25 வயது) ஒருவர், சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், குண்டூரில் இருந்து சென்னை திரும்ப ஐதராபாத்–சென்னை விரைவு ரயிலில் ஏ.சி. பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். அவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதனால் பெண்ணின் உறவினர்கள் சென்னை ரயிலில் ‘பி–1’ பெட்டியில் டிக்கெட் பரிசோதகராக பணியில் இருந்த ரெங்கையா (45) என்பவரை அணுகி ‘பெர்த்’ ஒதுக்கித் தருமாறு கூறினர். அவரும் ‘பெர்த்’ ஒதுக்கிக் கொடுத்தார். அதில் பெண் என்ஜினீயர் தூங்கிக் கொண்டு பயணம் செய்து வந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா அருகில் வந்து அமர்ந்தார். பெண் என்ஜினீயரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் டிக்கெட் பரிசோதகரைப் பார்த்து சத்தம் போட்டு எச்சரித்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் எழுந்து சென்று விட்டார். அதன் பிறகு ரயில், சின கஞ்சா ரயில் நிலையம் அருகில் வந்த போது டிக்கெட் பரிசோதகர் ரெங்கையா மீண்டும் அந்த பெண் என்ஜினீயரின் இருக்கைக்கு சென்று அருகில் படுத்துக் கொண்டு பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே அந்தப் பெண் டிக்கெட் பரிசோதகரின் பிடியில் இருந்து தப்பி கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். கழிவறையில் இருந்தவாறு குண்டூரில் உள்ள கணவரிடம் போனில் பேசி டிக்கெட் பரிசோதகரின் செயல் பற்றி கூறினார். இதை அடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். ரயில் ஓங்கோல் ரயில் நிலையம் வந்ததும், அந்தப் பெண் வெளியில் வந்து, அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். மேலும் அந்தப் பெண் அதே ரயிலில் பயணிக்காமல், குண்டூருக்கு வேறு ரயில் திரும்பிச் சென்றார். இந்நிலையில் சென்னை ரயில் அதிகாலையில் சென்ட்ரல் வந்து சேர்ந்ததும், சென்ட்ரலில் தயாராகக் காத்திருந்த ரயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகர் ரெங்கையாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: டிக்கெட் பரிசோதகர் கைது
Popular Categories


