சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த பெரும் சர்ச்சைக்கு உள்ளான ரூ.10 லட்சம் மதிப்பு என்று சொல்லப்பட்ட கோட் சூட் இன்று ஏலத்துக்கு வந்தது. ரூ. 10 லட்சம் மதிப்புள்ளதாகக் கூறப்பட்ட அந்த கோட் சூட்டை ரூ. 1 கோடிக்கு ஏலம் கேட்டார் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர். முன்னதாக ரூ. 51 லட்சத்துக்கு ராஜுபாய் அகர்வால் என்ற பாஜகவைச் சேர்ந்த ஒருவர் ஏலம் கேட்டார். ஆனால், சுரேஷ் அகர்வால் அதை விட இரண்டு மடங்குக்கு ஏலம் கேட்டார்.
தனக்கு அன்பளிப்பாக வழங்கப் பட்ட சுமார் 450 பொருட்களை ஏலத்தில் விட்டு, அரசு கஜானாவில் நிதியைச் சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் அகர்வால் ரூ. 1 கோடிக்கு மோடியின் கோட் சூட்டை ஏலம் கேட்டார். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்றபோது, மோடி அணிந்திருந்த கோட் சூட் பெரிதும் பேசப்பட்டது. அவரது பெயர் பொறிக்கப்பட்ட அந்த கோட்டின் விலை, ரூ. 10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. பிரதமர் இந்த அளவுக்கு விலை உயர்ந்த ஒரு கோட் சூட் அணியலாமா என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கோட் சூட்டை பிரதமர் அணியலாமா என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரசாரம் தில்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. பாஜக தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று இப்போது விமர்சிக்கப் பட்டு வருகிறது குறிப்பிடத் தக்கது.
சர்ச்சைக்குள்ளான மோடியின் கோட் சூட் ஏலம்: ரூ. 1 கோடிக்குக் கேட்ட தொழிலதிபர்
Popular Categories


