ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விஷ மீனின் கொடுக்கு தாக்கி தமிழக மீனவர் காயமடைந்தார். அவரை மீட்ட இலங்கைக் கடற்படையினர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறீசேனா அதிபர் ஆன பின்னர் இலங்கைக் கடற்படையினரின் போக்கு மாறியிருப்பதாக மீனவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதற்கு ஏற்றார்ப் போல், நேற்று முதல் முறையாக தமிழக மீனவரை மனிதாபிமானத்துடன் இலங்கைக் கடற்படையினர் அணுகியுள்ளனர். நேற்று ராமேஸ்வரம் கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர் குபேந்திரன் இந்தியா- இலங்கைக்கு இடைப்பட்ட கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பிடித்த மீன்களில் ஒன்று விஷக் கொடுக்கினால் குபேந்திரனை தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் தனியாக படகில் மயங்கிக் கிடப்பதை ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர் கவனித்தனர். அவரது உடலில் தைத்திருந்த மீனின் விஷ முள்ளை அகற்றிய இலங்கைக் கடற்படையினர், அவருக்கு விஷ முறிவு மருந்துடன் கூடிய குளுக்கோஸ் ஏற்றி, சுயநினைவுக்குத் திரும்பிய பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
விஷ மீன் தாக்கி காயமடைந்த தமிழக மீனவரை இலங்கை கடற்படை காப்பாற்றி அனுப்பி வைத்தது
Popular Categories


