அறைகள் காலி இல்லை; மறுத்த மைசூர் ஹோட்டல் நிர்வாகம்; வேறு இடத்தில் தங்கிய மோடி!

Published:

மைசூரு:
மோடி மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு அறை கேட்ட போது, அறை காலி இல்லை என்று மறுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். இதை அடுத்து அதிகாரிகள் வேறு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக வந்தார் பிரதமர் மோடி. அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்தனர். அத்தனை பேருக்கும் ஒதுக்க மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டல் நிர்வாகம், இடம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டது. தனி நபர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக முன்னதாகவே அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் வேறு வழின் இல்லாமல் மறுத்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.

முன்னதாக, சிரவணபெலகெலாவிலுள்ள கோமதீஸ்வரர் 88 வது மகாமஸ்தாபிஷேக விழாவில் திங்கள்கிழமை நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதற்காக மைசூருவுக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிரவணபெலகேலாவுக்க்குச் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், ரயில்வே நிகழ்ச்சியிலும், பாஜக., பேரணியிலும் கலந்து கொண்டார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

மோடிக்கு அறை ஒதுக்க மறுத்த விவகாரம் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் பட்ட போது, ஹோட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் இது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியபோது, துணை ஆணயர் அலுவலக ஊழியர்கள் எங்களிடம், பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். மூன்று அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. அவை அவர்களுக்கு போதாது என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டோம் என்று கூறினார்.

இதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் மோடி தங்குவதற்கு ஏற்பாடு செய்தது.

Related articles

Recent articles

spot_img