மஹாராஷ்டிராவில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு எதிர்கட்சி தலைவரே ஆளும் பாஜ, வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார். 9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதை அடுத்து, மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவியை பாஜக.,வின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் அஜித் பவார் பகிர்ந்து கொள்கிறார்.
முன்னதாக, அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்தார். அப்போது அஜித் பவாருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு 26 எம்எல்ஏ.,க்களுடன் ஆளும் பாஜக., கூட்டணியில் இணைந்தார். தனது ஆதரவு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் ஆளுநரை சந்தித்தார்.
ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து அவரது ஆதரவு 8 எம்எல்ஏக்களும் அமைச்சராக பதவியேற்றனர். அதிதி தட்கரே, சகன் புஜ்பால், தனஞ்செய் முன்டே, திலீல் வால்சே பாட்டீல், அனில் பாட்டீல் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்ற உறுதியான தகவல் இல்லை. 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியில், மொத்தம் 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அஜித் பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்பது இது 3 வது முறை. முன்னதாக, கடந்த 2019 ம் ஆண்டு பாஜ,வின் பட்னாவிசுடன் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 8 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார். பிறகு, உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்த போதும், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
எவ்வித முன் அறிவிப்புமின்றி, திடீரென நிகழ்ந்த இந்த அரசியல் மாற்றம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் பவாரின் இந்த முடிவுக்குக் காரணமாக அண்மையில் நடந்த பீகார் கூட்டத்தைக் கை காட்டுகின்றனர்.
அண்மையில் பீகாரில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து மேடையை பகிர்ந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் முடிவு குறித்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அஜித் பவாருடன் ராஜ்பவனுக்கு வந்த எம்எல்ஏ.,க்கள் இந்த அதிருப்தியை வெளியிட்டதாகத் தெரிகிறது. சரத் பவாரின் இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக பார்க்கப்பட்டு அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் தலைமைப் பிரச்னை, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியின் தலைமையில் பணியாற்றத் தயாராக இருப்பதை அஜித் பவார் மற்றும் சகன் புஜ்பால் உள்ளிட்ட தலைவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.
பாட்னாவில் ராகுல் காந்தியுடன் சரத் பவார் இருந்தது, அஜித் பவாருக்கு தனது கட்சி சகாக்களைப் பிரிந்து செல்லும்படி செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியது. 54 என்சிபி எம்எல்ஏ.,க்களில் கணிசமான பெரும்பான்மையான 40 பேர் இப்போது அஜித் பவாரின் முடிவை ஆதரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.