
ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியைத் தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
அதன்படி இன்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு பெண்கள் சிலர், ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், வாராணசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி, விஸ்வநாதர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகழாய்வுக்கு தடைவிதித்ததுடன், இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26, 27-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் ஆக.3 இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.