மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக., வெற்றி முகத்தில் உள்ளது.
முன்னதாக, கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆகியவற்றில், ம.பி., ராஜஸ்தானில் இழுபறியும், மற்ற இரண்டில் காங்கிரஸும் வெற்றி பெறும் என கூறப்பட்டது. இந்நிலையில், கருத்துக்கணிப்புகளைக் கடந்து, பாஜக.,வின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்பது குறித்து வட நாட்டு ஊடகங்களில் அலசப்படுகிறது. அவற்றில், காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக.,வின் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது முக்கிய இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி சனாதன ஒழிப்புக் கொள்கை உள்ள கூட்டணி என்ற எண்ணம் அடிப்படையாக வாக்காளர்களின் மனத்தில் பதிந்து போனதுதான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை மக்கள் பெரிதாக நம்பவில்லை, காங்கிரஸ் அளித்த இலவசங்கள் அள்ளித் தெளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை வாக்காளர்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை இது காங்கிரஸ் வாக்குக்காக பொய்யான வாக்குறுதிகளையே அழிக்கும் என்ற எண்ணம் வாக்காளர்களிடம் ஏற்பட்டதைக் காட்டுகிறது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பாஜக தரப்பில் கூறும்போது இது பிரதமர் மோடி அளித்து வரும் மக்கள் நல பணிகளுக்கான வெற்றி, மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்த அளவில் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை பாஜக மீது வைத்துள்ளார்கள். மாநில அரசு மக்களுக்கு கொடுத்துள்ள மக்கள் நல திட்டங்கள் மிகப்பெரிய அளவில் சாதாரண மக்களிடமும் வலுவாக சென்றடைந்துள்ளன என்பதையே இது காட்டுகிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் இவற்றிலும் மத்திய அரசின் திட்டங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும் ஈர்ர்ப்புமே காரணம் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள். தெலுங்கானாவில் கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது வாக்கு சதவீதம் பெரிதாக உயர்ந்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதே நேரம், நான்கு மாநில தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சனாதன தர்மத்தை (ஹிந்து மதத்தை) அழிப்பேன் என்று சொன்னவர்களுக்கு துணை நின்றவர்கள் அழிந்து போன நாள் இன்று.
சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விட்டது. ‘INDI’ கூட்டணியின் 2 அரசுகளை கவலையில்லாமல் பறிகொடுத்து நின்றாலும், போனது தங்களின் ஆட்சி இல்லை என்ற நிம்மதியில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பாவம், அந்த நிம்மதி இன்னும் 4 மாதங்களில் பறிபோய் விடும் என்று தெரியாமல், புரிந்து கொள்ளாமல் சனாதனத்தை (ஹிந்து மதத்தை) ஒழிப்பதற்காக மும்முரமாக, தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்… என்று கருத்து தெரிவித்துள்ளார்.
வடநாட்டு ஊடகங்களிலும், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கரில் காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் போனதற்கு, சனாதனம் குறித்த தி.மு.க.,வினரின் பேச்சு முக்கிய காரணம் என்றே கருத்து தெரிவிக்கிறார்கள்.
அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா கொசு இவற்றைப் போல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதல்வரும், அவரது தந்தையுமான ஸ்டாலின் மற்றும் திமுக.,வினர் அவருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். யாரும் அவரது பேச்சை கண்டிக்கவில்லை.
ஆனால், ’இண்டி’ கூட்டணி உருவான நேரத்தில் உதயநிதியின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அக்கூட்டணி தலைவர்கள் இந்த பேச்சை விரும்பவில்லை. சனாதனம் குறித்த பேச்சு தேவையற்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். வட மாநிலங்களிலும் இண்டி கூட்டணிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை கைகாட்டி, இண்டி கூட்டணியின் கொள்கை இதுதான் என்ற அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, உதயநிதியின் பேச்சை எதிர்த்து வட மாநிலங்களில் பாஜக., தீவிர பிரசாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார்கள். அந்த நேரம் உதயநிதியிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேட்டபோது, என்னுடைய பேச்சால் வடக்கே பிரச்சனை ஏற்படுகிறது என்ற கருத்தை உதயநிதியும் ஒப்புக்கொண்டார்.
பெரும்பாலும் தமிழகத்தில் திமுக.,வின், இந்து விரோத, இந்தியா விரோத, இந்தி எதிர்ப்பு, தேச ஒற்றுமையை கிண்டல் செய்யும் தேசவிரோதக் கருத்துகள் பொதிந்த மேடைப்பேச்சுகள் தமிழகத்துக்கு உள்ளேயே நின்றுவிடும். ஆனால் இந்த முறை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த பேச்சுகளை ஆங்கிலத்திலும் இந்தியில் மொழிபெயர்த்து வட இந்திய அளவில் எடுத்துச் சென்றார். அதனால் திமுகவின் மேடைப்பேச்சுகள் எல்லாம் வட இந்திய அளவிலும் எதிரொலித்து மக்களிடம் பெரும் வெறுப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்தன. குறிப்பாக திமுகவின் இந்தி எதிர்ப்பு பேச்சுகள், சனாதன ஒழிப்பு பேச்சுகள், தமிழகத்தில் கோயில்களை மட்டும் குறிவைத்து இடித்து தள்ளுவது போன்றவை காங்கிரஸ் கூட்டணியின் செயல்பாடுகள் என்பதாக மக்கள் மனதில் ஆழ பதிந்தன.
நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து கொண்ட காங்கிரஸ், இதனையடுத்து ‘இண்டி’ கூட்டணி சார்பில் ம.பி., மாநிலத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்தது. எனினும் ஒரு பக்கம் பாஜக தனது மக்கள் நல திட்டங்களை வளர்ச்சிப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சென்ற அதே நேரத்தில், மக்களின் உணர்வுகளில் ஒன்றிப்போன சனாதன ஒழிப்பு குறித்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கோர முகத்தையும் கொண்டு சென்றது.
இந்நிலையில் இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடந்து முடிந்தன. ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் இழுபறி ஏற்படும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என கருத்து கணிப்புகள் பலவும் தெரிவித்தன. ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலை குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசார்யா பிரமோத் கூறுகையில், சனாதன தர்மத்தை எதிர்த்தது காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்துவிட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது. சனாதனத்தை எதிர்த்தால் இது தான் நடக்கும் எனக் கருத்து தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட சமூகத் தள கருத்தில், சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், நிச்சயம் அதற்கான விளைவுகளை பேச வேண்டியிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற பாஜக.,வுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சிறந்த தலைமைக்கு சான்றளிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. அடிமட்ட அளவில் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு புறம் கூட்டணிக் கட்சி திமுக.,வால் பெரும் சரிவைச் சந்தித்த காங்கிரஸ், இன்னொருபுறம், கூட்டணிக் கட்சிகளை நம்பாமல், தனித்துக் களம் இறங்கியதும்கூட அதன் தோல்விக்குக் காரணம் ஆகிவிட்டது. ராஜஸ்தான், ம.பி., சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் உடன் தேர்தலைச் சந்திக்காததால் இந்தத் தோல்வி ஏற்பட்டதாக ஊடகங்களில் சில கருத்துகள் பகிரப்பட்டன.
மத்தியப் பிரதேசத்தில் இண்டி கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை அருகே சேர்க்காமல், 230 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டாலும், மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், ‛கூட்டு’ சேராமல் களமிறங்கியதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதனால், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ம.பி.,யில் உள்ள 230 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 66ல் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆளும் பாஜக.,வோ, 163 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைக்கிறது.
ராஜஸ்தானில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 199 தொகுதிகளில் போட்டியிட்டு, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கி தேர்தலை சந்தித்தது. அந்த மாநிலத்திலும், இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம்ஆத்மி கட்சிகளை ஒதுக்கியது காங்கிரஸ். இங்கும் காங்கிரஸால் 70 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. இவ்வாறு அங்கும் மாநில அரசைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். பாஜக., 115ல் முன்னிலை பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இண்டி கூட்டணி என்பது, மத்திய பாஜக., அரசினை எதிர்கொள்ள மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி, காங்கிரஸ் தன் சுயநல உள்நோக்கத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. மாநிலத் தேர்தல்களிலேயே கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து தேர்தலை சந்திக்காமல் தனியாக கால்பதிக்க நினைத்து, கீழே விழுந்துள்ளது காங்கிரஸ்! எனினும், அடுத்த மக்கள்வைத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள வரும் டிச.6ம் தேதி இண்டி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டப் போவதாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!
இப்படி, கூட்டணியால் இருந்ததும் போச்சு… கூட்டணியால் வருவதும் வராமல் போச்சு… என்ற நிலையில் தவிக்கிறது காங்கிறது!