புது தில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு அதிகளவில் பெற, தந்தையின் நிதி அமைச்சர் என்ற பதவியை பயன்படுத்தி, அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டு, தரகு தொகை பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை வரும் 24ஆம் தேதி வரை தில்லி திஹார் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கார்த்தியை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. ஆனால், அவர் வாய் திறந்து விசாரணைகளுக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை என்றும், இதனால் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப் பட வேண்டும் என்றும் கூட சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், திங்கள் கிழமை இன்று கார்த்தி சிதம்பரத்தை தில்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
கார்த்தி தனது ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் கார்த்தியை அடுத்து வரும் 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் தில்லி திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே தன்னை திகார் சிறையில் தனி செல்லில் அடைக்கக் கோரி கார்த்தி தனி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவையாவது இன்றே விசாரியுங்கள் என்று அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.