புது தில்லி:
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாமில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்ததால் போர் பதற்றம் நிலவியது.
பின்னர், வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெற்றன.
டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அடுத்த மாத இறுதியில் சீனா பயணம் செல்லவுள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆனால், சீனா செல்வதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.