சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் சுமார் 1000 பேரை அழைத்துக் கொண்டு புனேவுக்கே போகிறது சிறப்பு ரயில். இதனால் இழப்பு தமிழகத்துக்கே என்றும், மத்திய ரயில்வே துறைக்குதான் லாபம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்தன.
அதன் ஒரு பகுதியாக, போராட்டத்துக்கு வரும் இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் என்று கூறி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்ய வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றன. இதனால், சென்னையில் நடைபெற திட்டமிட்ட போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.
அதில், சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டி, புனேவுக்குத் இடமாற்றம் செய்யப்பட்டது. வரும் 20ஆம் தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புனேவில் நடைபெறுகிறது.
ஆனால், இந்தப் போட்டிகளைக் காண வாய்ப்பில்லாத நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே, சிஎஸ்கே ஃபேன்ஸ் கிளப் என்றொரு அமைப்பின் மூலமாக சிஎஸ்கே நிர்வாகத்துக்கு கோரிக்கை ஒன்று வைத்தது. சென்னை ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், சலுகை விலையில் ரயில் அல்லது விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தருமாறு கோரியது. அல்லது ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தது. இதை பரிசீலித்த சிஎஸ்கே அணி நிர்வாகம், இது குறித்து யோசித்தது.
சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே ஆட்டங்களைக் காண முடியாத ரசிகர்களுக்கு புதிய ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
ரயிலில் ஓரிரு பெட்டிகள் ஒதுக்கித் தந்தாலே போதும் என்று கேட்ட நிலையில், ஒரு ரயிலையே ஏற்பாடு செய்துவிட்டது. இதையடுத்து தோனியின் தீவிர ரசிகரான சரவணன், பிரபு ஆகியோர் புனே செல்லக்கூடிய சிஎஸ்கே ரசிகர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். நாளை புனேவில் சென்னை – ராஜஸ்தான் ஐபிஎல் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டம் முடிந்த பிறகு அதே சிறப்பு ரயிலில் அனைவரும் அடுத்த நாள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் புனேவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்குவதற்கும் அவர்களுடைய உணவுச் செலவுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பயணம் குறித்த புகைப்படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
#Whistlepodu Tweets