கர்நாடகாவில் வீசுவது பாஜக.,வுக்கு ஆதரவான அலை அல்ல, சூறாவளியே வீசுகிறது என தனது கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளிலேயே போட்டுத் தாக்கினார் மோடி.
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குகிறார் பிரதமர் மோடி. இன்று ஒரே நாளில் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன் முதல் நிகழ்ச்சியாக இன்று சாம்ராஜ்நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ராகுல் காந்தி குறித்தும், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் குறித்தும் பிடி பிடி எனப் பிடித்தார். குறிப்பாக, ராகுல் காந்திக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, இவற்றுக்கு பதில் சொல்ல முடியுமா என கடும் சவால் விட்டார் மோடி.
சாம்ராஜ் நகர் கூட்டத்தில் மோடி பேசியபோது.. பாரதீய ஜனதா மீதும், எடியூரப்பா மீதும் கர்நாடகத்து மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். கர்நாடகாவில் மாற்றத்திற்கான அலை வீசுவது தில்லிக்கு நன்கு தெரிந்துள்ளது. கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஆதரவான அலை அல்ல, சூறாவளியே வீசுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக., அமோக வெற்றி பெறும். நான் இங்கே கர்நாடகாவின் எதிர்கால முதல்வருடன் அமர்ந்துள்ளேன். எடியூரப்பா கர்நாடக நிச்சயம் கர்நாடகத்தின் முதல்வர் ஆவார்.
கண்ணியத்திற்கான எல்லையை காங்கிரஸ் தலைவர் உடைத்துவிட்டார். பாஜக.,வை திட்டித் தீர்ப்பதில் ராகுல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கு பதில் மக்களை போற்ற வேண்டும். ஏழைகளுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
ராகுலுக்கு வாரிசு அரசியலில் மட்டும் தான் நம்பிக்கை உள்ளது. திறமையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. கர்நாடகத்தின் கிராமங்களுடைய வளர்ச்சிக்கு காங்கிரஸ் என்ன செய்துள்ளது? ஆனால் எங்களின் இலக்கு வளர்ச்சிதான். அரசியல் அல்ல.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் இப்போது செய்துள்ளோம். நமது நாட்டின் உண்மையான வரலாறே தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்குக்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை.
ஏப்ரல் 28ஆம் தேதி அன்று இந்தியாவின் அனைத்து கிராமங்களும் மின்சார மயமாக்கப்பட்டன. உழைப்பாளர் தினமான இன்று தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நாட்டின் இந்த வரலாற்று சாதனையை அர்ப்பணிக்க வேண்டும். 2009 ல் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2005 ல் கூறினார். ஆனால் என்ன நடந்தது. காங்கிரஸ், மன்மோகன் சிங்கை எப்படி கையாண்டது என்று நாம் பார்த்தோம். அவர்கள் நியாயங்களை கிழித்தெறிந்து அவரை அவமதித்தார்கள்.
தனது தாய் சோனியாவின் வார்த்தைகளுக்கு ராகுல் மதிப்பளிக்க வேண்டும். தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மன்மோகன் சிங் தவறிவிட்டார். காங்கிரஸ் தவறான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறது. 2009ல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என சோனியா காந்தியும் கூறினார். பெரிய பெரிய வாக்குறுதிகளை எல்லாம் மக்களுக்கு அளித்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், அவற்றை மோடி நிறைவேற்ற வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.
15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் நடத்த தயாரா என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனக்கு சவால் விடுக்கிறார். அவர் 15 நிமிடங்கள் பேசினால், நான் அவருக்கு முன்னர் நிற்கவே முடியாது என அவர் கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். உங்கள் முன் நிற்க முடியாதுதான், உட்கார்ந்து தான் கேட்க வேண்டும். நாங்கள் கடும் உழைப்பாளிகள். எவ்வாறு வாரிசுகள் முன் அமர முடியும்.
ராகுல் காந்தியால் 15 நிமிடங்கள் பேச முடியுமா? வாரிசு அரசியலுக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. வாரிசு ராகுல் முன் காங்கிரஸ் தொண்டர்கள் கூட முன் நின்று பேச மாட்டார்கள். ராகுல் வார்த்தைகள் என்னை ஒன்றும் காயப்படுத்தாது. வாரிசு அரசியல்வாதியிடமிருந்து இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
இப்போது நான் சவால் விடுக்கிறேன். ராகுலுக்கு சவால் விடுக்கிறேன். பேப்பர் எதையும் பார்க்காமல் தொடர்ந்து 15 நிமிடங்கள், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று பேச முடியுமா? கர்நாடக அரசின் சாதனைகள் குறித்து ஒரு 15 நிமிடங்கள் ராகுலால் தொடர்ந்து பேச முடியுமா?
தனது கட்சி தலைவர்களின் பெயர்களைக் கூட ராகுலால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தாவுக்கே பாதுகாப்பு இல்லை. அப்படி என்றால் பொதுமக்கள் எதைத் தான் எதிர்பார்க்க முடியும். இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.
இந்தியா 2022ஆம் ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக இருக்கும். வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாகுறை இருந்தாலும் கூட, விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்… – என்று பேசினார் மோடி.


