புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. சட்டத் துறை அமைச்சராக உள்ள தோமர் சட்டம் படிக்காமலேயே சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் தோமர் அளித்துள்ள சான்றிதழ்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பீகாரின், பாகல்பூர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அந்த சான்றிதழ்கள் அனுப்பப்பட்டன. அந்தப் பல்கலைக் கழகம் அளித்துள்ள பதிலில், அமைச்சர் குறிப்பிட்டுள்ள சான்றிதழ் எண், வேறொருவர் பெயரில் உள்ளதாகவும், சான்றிதழின் விவரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை அறிந்த, பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ், ‘சட்டத் துறை அமைச்சர் தோமரை, பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால், ‘இந்த விவகாரம் குறித்து, அமைச்சர் தோமர், நீதிமன்றத்தில் உரிய பதிலளிப்பார்’ என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.
Popular Categories



