கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனை சுரேஷ் என்ற சிற்பி வடிவமைத்து வருகிறார். இதனை கன்னியாகுமரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டு இந்தியாவின் புண்ணிய தலங்களில் கரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாய்பாய் அஸ்தி அடங்கிய 6 கலசங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் கரைக்கப்படுகிறது. வாஜ்பாய் அஸ்தி கலசம் நாளை (26-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படுகிறது.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் குமரி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் வாஜ்பாய் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த பணி இன்று காலை முழுமை அடைந்தது. புதுக்கிராமத்தைச் சேர்ந்த சிற்பி சுரேஷ் 10 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்து உள்ளார்.



