ஹைதராபாத்தில் உள்ள கொத்தபேட் மகாலட்சுமி ஆலயத்தில் நடந்த விசேஷ பூஜையின் போது, திடீரென்று கட்டுமான பலகை உடைந்து சரிந்தது. அதன் மேல் நின்று பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திரிதண்டி ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர், கொத்தபேட் மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னர், கோபுரத்தின் மேல் பகுதியில் சிறப்பு பூஜைகளை செய்வதற்காக, கம்புகளால் ஆன படிகளில் ஏறி பூஜைகளை செய்தனர். அப்போது கம்பு படிக்கட்டுகளுக்காக கட்டப்பட்டிருந்த சாரம் திடீரென பாரம் தாங்காமல் உடைந்தது.
கோபுரத்தின் மேல் பகுதிக்கு செல்வதற்காக ஆலய கமிட்டி உறுப்பினர்கள் கம்புகளாலான சாரம் அமைத்து வைத்திருந்தனர் அதன் மேல் ஏறி பூஜைகள் செய்வதற்காக சுவாமிஜியும் அர்ச்சகர்களும் கர்ப்பூர ஹாரத்தி காட்டி, பூஜைகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாரம் தாங்காமல் மேல் பலகை உடைந்து விழுந்தது. அப்போது பூஜை செய்வதற்காக கொண்டு சென்ற பித்தளை தாம்பாளங்கள், தட்டுகள், மணி பூஜைப் பொருள்கள் கீழே சிதறி விழுந்தன. இதனால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கோபுரத்தின் பக்கவாட்டு சுவரைப் பிடித்துக் கொண்டு ஜீயர் ஸ்வாமியும் மற்றவர்களும் கீழே விழாமல் தப்பினர். கோபுரத்தின் மேல் பகுதியில் பூஜை செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கம்புகளால் கட்டப்பட்ட சாரத்தின் மேல் ஏறியதால் பாரம் தாங்காமல் உடைந்து விழுந்ததாகத் தெரிகிறது.
பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி…