இன்று சமூக வலைத்தளங்களிலும் சரி, செய்தி இணையதளங்களிலும், மீடியாக்களிலும் சரி.. ஹிட் அடித்த நியூஸ் என்னவென்றால், ஹிட் அடித்த தோனி குறித்தானதுதான்!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது.
இதில் முதலில் நடந்த டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்ட நிலையில் 1 – 1 என சமனில் முடிந்தது.
பின்னர் டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
தொடர்ந்து, நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
அந்த வகையில், இன்று நடைபெற்ற கடைசிப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது. ரோஹித் சர்மா 9 ரன்னிலும் , தவான் 23 ரன்னிலும் ஆட்டம் இழக்க, பின்னர் வந்த விராட் கோலி 46 ரன் அடித்து வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, கேதார் ஜாதவ் இணை நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடியது.
இறுதியில் 49.2 ஓவரில் இந்திய அணி 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது, இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற தோனி 87 ரன்களும், ஜாதவ் 61 ரன்களும் எடுத்தனர்.
முதல் முறையுமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்தத் தொடரில் தொடர் நாயகனாக தோனி தேர்வானார்!
இதில் குறிப்பிடத் தக்க அம்சம், 10 ஆண்டுகளுக்கு பிறகு தோனி இப்பொழுதுதான் தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார் என்பது!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும், வரிசையாக 3 அரை சதங்களைக் கடந்தார் தோனி. 51, 55* மற்றும் இன்றைய போட்டியில் 87* ரன் என அடித்து தூள்கிளப்பியுள்ளார்.