கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்குள்ளே ஏற்பட்ட அடிதடி, ரகளை, கைகலப்பில் காயமடைந்த ஆனந்த் சிங் எம்.எல்.ஏ., அப்பலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஜே.என்.கணேஷ்,பீமா நாயக் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், கட்சியில் பிளவைத் தடுக்க இன்று அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக., முயற்சி செய்வதாகக் கூறிக் கொண்டு, காங்கிரஸுக்குள் ஓர் அதிகாரப் போட்டியை முன்னாள் முதல்வரும் இப்போது கட்சியை விட்டு ஒதுக்கப் பட்டிருப்பவருமான சித்தராமையாவும், தற்போதைய அமைச்சர் சிவகுமாரும் நடத்தி வருகிறார்கள் என்று கூறப் படுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கவே அவர்கள் இப்படி தங்கவைக்கப் பட்டிருப்பதாக சித்தராமையா கூறுகிறார்.
இந்நிலையில்,சொகுசு விடுதியில் இரவு விருந்தின்போது பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க.வுக்கு செல்லவிருக்கும் தங்கள் திட்டத்தை கட்சித் தலைமையிடம் கூறியதாக ஆனந்த்சிங் மீது மற்ற இருவரும் மதுபாட்டிலை உடைத்து தாக்கினராம். இதனால் காயமடைந்த நிலையில் ஆனந்த்சிங் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, எம்.எல்.ஏ.க்களிடையே மேலும் பிளவு ஏற்படாமல் தடுக்க அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.