பாக். தேசிய தின கொண்டாட்டம் புறக்கணிப்பு! பயங்கரவாதமிலா பாகிஸ்தான் உருவாக வாழ்த்து! இதுதான் மோடி!

Published:

imran khan narendra modi - 2026

இன்று பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டம் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த நிலையில், இதனை இந்தியா முற்றிலும் புறக்கணித்தது.

அதே நேரம், பாகிஸ்தானுக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இம்ரான் கான், பாகிஸ்தான் மக்களுக்கு மோடி வாழ்த்து கூறியுள்ளார். வன்முறை, பயங்கரவாதம் அல்லாத சூழலை உருவாக்க இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அமைதி, வளம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகியவற்றுக்காக இருநாட்டு மக்களும் இணைந்து பணியாற்ற இதுவே சரியான தருணம் என மோடி தெரிவித்துள்ளார் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் மக்களுக்காக,பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியை வரவேற்கிறேன். நாம் பாகிஸ்தான் தினம் கொண்டாடும் வேளையில், இந்தியாவுடனான அனைத்துவித பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். குறிப்பாக, முக்கியமான காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசி, புதிய உறவுகளை வலுப்படுத்த வேண்டும். நம் அனைத்து மக்களின் வளர்ச்சி மற்றும் அமைதியின் அடிப்படையில் … என்று கூறியுள்ளார் இம்ரான் கான்.

ஆனால் பிரதமர் மோடி எவ்வாறு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் என்று இம்ரான் எதுவும் குறிப்பிடவில்லை. போனில் வாழ்த்தினாரா, கடிதம் அனுப்பினாரா என்றெல்லாம் தகவல் வெளியிடவில்லை.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

எல்லாவற்றுக்கும் தனது டிவிட்டர் பதிவில் கருத்துகளைப் பதிவிடும் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் மக்களுக்கான வாழ்த்து என்று எதுவும் குறிப்பிடவில்லை.

அதே நேரம், பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு காங்கிரஸின் ஆலோசகர் சாம் பிட்ராடா கூறிய கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய ராணுவத்தினரை கேவலப் படுத்தும் காங்கிரஸின் ஊதுகுழலாக சாம்பிட்ராடா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய தினம் இன்று அந்நாட்டில் கொண்டாடப் படும் நிலையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

முன்னதாக, துாதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் வழக்கம் போல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் தேசிய தின விழாவை புறக்கணிப்பதாக மத்திய அரசு முடிவு செய்தது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இதை அடுத்து, தில்லியில் உள்ள, பாகிஸ்தான் துாதரக நிகழ்ச்சிகளில் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் அறிவித்தது.

இம்ரான் கான் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியின் படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சிக்காகவும், பயங்கரவாதம், வன்முறையில்லாத அமைதியான பாகிஸ்தான் உருவாகவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதை வரவேற்ற இம்ரான் கானோ, மீண்டும் காஷ்மீர் பிரச்னை, அமைதிப் பேச்சு வார்த்தை, என்று அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் பிரதமர் சொல்வதை, அமைச்சரவை சொல்வதை ராணுவம் கேட்கும். இந்திய நாடாளுமன்றத்துக்குக் கட்டுப் பட்டது ராணுவம். ஆனால் பாகிஸ்தானிலோ, ஐ.எஸ்.ஐ.,க்கும் ராணுவத்துக்கும் கட்டுப் பட்டது நாடாளுமன்றமும் பிரதமரும். எதை நம்பி, யாரை முன்னிட்டு பேச்சுவார்த்தை நடத்துவது!? இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் என்ன மதிப்பு கொடுத்துள்ளது?

மோடி பிரதமர் ஆனதும், அமைதித் தூதுவராக சொல்லாமல் கொள்ளாமல் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, முன்னேற்பாடும் இன்றி, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்த நாளுக்கு பாகிஸ்தானில் தனி நபராய் கால் வைத்ததும், நவாசின் தாயாருக்கு குஜராத்தின் புகழ்பெற்ற புடைவைகளை வாங்கிச் சென்று பரிசளித்ததும் என தொடக்க காலத்தில் நட்பு பாராட்டியதைக் கண்டு நாடு மட்டுமல்ல… உலகமே வியந்து பார்த்தது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதே நேரம் இந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடந்த மாற்றங்கள், பிரதமர்கள் தூக்கி எறியப் பட்டவிதம், இப்போதும் ஆட்சியாளர்கள் நாங்கள் தான் என்று ராணுவம் கொக்கரிக்கும் விதம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு…

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் இல்லை…! நாங்கள் பேசியதெல்லாம் போதும்..! இனி இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் அவர்கள் மொழியில் பேசிக் கொள்வார்கள் என்று … புதிய விதத்தில் பேச்சுவார்த்தை அணுகுமுறையை மோடி மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுதான் இப்போதைக்கு இம்ரான் கானை அச்சத்தில் தள்ளியுள்ளது. தங்கள் கைப்பாவையாக இம்ரானை வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவமும் எதையாவது சொல்லி நடிக்கவைக்க இம்ரானை ஆட்டி வைத்து வருகிறது. ஆனாலும் உலகம் நம்பவேண்டுமே! அதனால்தான் தங்கள் இந்திய ஏஜெண்டுகளான காங்கிரஸாரை வாய் திறக்க வைத்து வருகிறது பாகிஸ்தான்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img