தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. தனியார் அமைப்புகள், ஊடகங்கள், ஊடகத்துறை சார்ந்த பல்வேறு குழுக்கள் மக்கள் கருத்து என சர்வே எடுத்து அவற்றைத் தொகுத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தக் கருத்துக் கணிப்புகள், தற்போதைய தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரசாரங்கள், அதன் மூலம் ஏற்பட்டுள்ள தாக்கம், மக்கள் மனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவற்றுக்கு முந்தைய மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.
முன்னதாக, கடந்த ஜனவரி 7ஆம் தேதிக்கும் பிப்ரவரி 26ஆம் தேதிக்கும் இடையே வெளியான அறிவிப்புகளால் தேர்தல் நேரத்தில் மோடிக்கும் பா.ஜ.க. அரசுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதாக கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
பாலாகோட் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களால் மோடிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
அதே நேரம், தற்போதைய காங்கிரஸின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ. 6ஆயிரம் என்ற திட்டம் எந்த அளவுக்கு ஒரு சாராரை மட்டும் சென்று சேர்ந்திருக்கிறது, அதற்கு மற்ற சாரார் என்ன விதமான எதிர்ப்பும் கடுப்பும் தெரிவிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் இந்த கருத்துக் கணிப்புகளில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இந்தக் கருத்துக் கணிப்பை, சிஎஸ்டிஎஸ், லோக்நீதி, தி இந்து, திரங்கா தொலைக்காட்சி, தைனிக் பாஸ்கர் போன்ற பல்வேறு ஊடக அமைப்புகள் நடத்தியுள்ளன.
இந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வர 43 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மே 2018 நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மோடிக்கு இருந்ததை விட தற்போது 9 சதவீத ஆதரவு அதிகரித்து உள்ளது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நீங்கள் இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி பிரதமராக 24 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் எவரும் மூன்று சதவீத வாக்குகளை விட அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.
மே14 | மே17 | ஜனவரி18 | மே18 | முன் வாக்கெடுப்பு 19 | |
நரேந்திர மோடி | 36 | 44 | 37 | 34 | 43 |
ராகுல்காந்தி | 16 | 9 | 20 | 24 | 24 |
மாயாவதி | 2 | 3 | 3 | 3 | 3 |
மம்தா பானர்ஜி | 1 | 1 | 3 | 3 | 2 |
மற்ற தலைவர்கள் | 17 | 19 | 18 | 19 | 13 |
பதில் இல்லை | 28 | 24 | 19 | 17 | 15 |
பாலகோட் தாக்குதல், 10 சதவிகித ஒதுக்கீடு மற்றும் அண்மைக் காலத்திய பண பரிவர்த்தனை ஆகியவற்றில் இருந்து பயன் அடைந்த விவசாயிகளிடமும், மத்திய் அரசின் திட்டங்களை நன்கு அறிந்தவர்கள் மத்தியிலும் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார். மோடி ஊழல் கறை படியாதவர் என்று பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.