ஹைதராபாத்: இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கடந்த மாதம் அர்ஜெண்டினாவில் மலைப் பகுதியில் மேற்கொண்ட பயணத்தின்போது மல்லி மஸ்தான் பாபு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மஸ்தான் பாபு உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் இறுதி மரியாதை செய்தனர். முன்னதாக, அர்ஜெண்டினாவில் இருந்து பாபுவின் உடல் நேற்று தில்லி வந்து பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் இன்று அவரது உடல் சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

