இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன நாளை பிற்பகல் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, வாக்குகளை பெற்றுத்தர இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானம் குறித்து அறிவிப்பது முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் அதிபரின் செயலகத்தில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில், தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. 19ஆவது திருத்தச் சட்டம் குறித்து வரும் ஏப்.27 மற்றும் 28ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுகிறது. அன்று பிற்பகல் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

