இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அலரி பகுதியில் உள்ள ரணில் வீட்டுக்கு அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரணிலின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இலங்கையின் அம்பாறை, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டெட்டனேட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே கல்முனை- சாய்ந்த மருது பகுதியில் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு நடநததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் போலீசார் சந்தேகத்துக்கு இடமான நபர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அந்தக் குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்தப் பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இது தற்கொலை குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அங்கே ராணுவம் மற்றும் போலீஸின் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அந்தக் குழுவினருடன் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக போலீஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை போலீஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.



