புது தில்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் எழுத்துபூர்வ வாதங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்பு வாதங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அன்பழகன் தரப்பு, தனது எழுத்துபூர்வ வாதத்தை நாளைக்குள் கர்நாடக உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏப்.28 செவ்வாய்க் கிழமை நாளை தாக்கல் செய்யப்படும்.

