நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தவறுதலாக பாஜக., வேட்பாளருக்கு ஓட்டு போட்டதற்காக, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர் ஒருவர் தனது விரல்களை அறுத்துக் கொண்டார்.
உத்திரப் பிரதேசத்தில் பாஜக., தனித்து போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன.
நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில், நேற்று உத்திரப் பிரதேசத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. புலன்த்ஷார் தொகுதியில் தற்போதைய பாஜக., எம்.பி., போலோ சிங்கும், பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் யோகேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ஷிகார்புராவின் அப்துல்லாபுர் ஹூலசன் கிராமத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தீவிர ஆதரவாளரான பவன்குமார் (25) என்பவர் வாக்களிக்கச் சென்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, அவர் தவறுதலாக பாஜக., வேட்பாளருக்கு வாக்களித்து விட்டார். ஆனால் இது குறித்து அவர் அறிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், தனது கைவிரலை , கத்தியால் அறுத்துக் கொண்டு, இது குறித்து டிவிட்டர் பதிவிலும் இதனைப் பதிவு செய்தார். இது டிவிட்டர் வாசிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையையும் ஏற்படுத்தியது.