புதுதில்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள போனி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிர புயலாக மாறி கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள போனி புயல், கடலியல் சூழல் மாற்றங்களால் கடலுக்குள் அதிக பலம் பெற்றுள்ளது. தற்போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின் வட கிழக்கு மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அந்தப் பகுதியை நோக்கி புயலின் திசை மாறியுள்ளது.
இந்நிலையில், ‘தமிழகத்துக்கு போனி புயலால் மழை இருக்காது’ என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்
தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிதீவிர புயலாக மாறியுள்ள ‘போனி’ புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதிதீவிர புயலாக மாறும்.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கக்கூடும். இதனால், மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்… என்று கூறப் பட்டுள்ளது.