எனக்கு உடல்நலம் சரியில்லை, எனவே மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு அமைந்த பாஜக தலைமையிலான தேஜகூ., அரசில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் அருண் ஜேட்லி! இவர் தேர்தலில் நின்று போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராகி பதவியை வகித்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
மத்திய நிதி அமைச்சராக சிறப்புற பதவி வகித்தார். மோதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஆனாலும், இவருக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துடன் தொடர்பு உண்டு என்றும், சிதம்பரம் குடும்பம் நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கிக் கொண்ட போதும், இவரின் தயவால்தான் தப்பித்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளும் இவர் மீது கூறப் பட்டதுண்டு.
அதே போல், அருண் ஜேட்லிக்கு ஆகாதவராக பாஜக.,வில் இருப்பவர் சுப்பிரமணியம் சுவாமி. அருண் ஜேட்லி மீது சில குற்றச்சாட்டுகளையும் சுமத்திவருகிறார். மோதியை தவறாக வழிநடத்துகிறார் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இருப்பினும், அருண் ஜேட்லி தேர்ந்த பொருளாதார நிபுணராக தன்னைக் காட்டி வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு அழகாக பதில் அளிப்பார்.
இருப்பினும் அருண் ஜேட்லி கடந்த ஒன்றரை வருடங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது இவருக்கு பதிலாக நிதி அமைச்சகத்தின் தற்காலிகப் பொறுப்பை ஏற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
உடல் நலக் குறைவு காரணமாக அருண் ஜேட்லி தேர்தலில் போட்டியிடவுமில்லை. தற்போது மத்தியில் மோதி அமைச்சரவை நாளை பதவியேற்கிறது.
இந்நிலையில் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்… தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் அங்கமாக இருந்ததை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். முதல்முறையாக இடம்பெற்ற தேஜகூ கூட்டணி அமைச்சரவையிலும், கட்சியிலும், எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் எனக்கு கட்சித் தலைமை நல்ல பொறுப்புகளை வழங்கியது.
கடந்த 18 மாதங்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்! நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்தேன். இதன் பிறகு, நீங்கள் கேதார்நாத்திலிருந்து வந்தவுடன் உங்களை சந்தித்து எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என வாய்மொழியாக தெரிவித்தேன்.
இதன் மூலம் எனது உடல்நிலையில் கவனம் செலுத்தவுள்ளேன். உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றுள்ளது. நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்நிலையில் எனது உடல்நிலையை கவனிக்க நான் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனக்கு மீண்டும் எந்தவொரு பொறுப்பும் வழங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
மற்றபடி கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியிலிருந்து செய்ய தயார் என அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அருண் ஜேட்லியின் கடிதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சரவையைத் தேர்வு செய்வது, பிரதமர் மற்றும் அமித்ஷாவின் பணி. அமைச்சராக அருண் ஜேட்லியைத் தேர்வு செய்வதே உறுதியாகாத நிலையில், தானாகவே முந்திக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்வது, அவர் ஏதோ ப்ளாக் மெயில் செய்வதையே வெளிக்காட்டுகிறது. உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அமைச்சராகப் பதவி ஏற்கிறீர்களா என்று அருண் ஜேட்லியிடம் கேட்டு அதற்கு அவர் கௌரவமாக மறுத்தால் அதை ஏற்கலாம். ஆனால், முந்திரிக் கொட்டைத்தனமாக, தாமே முன்வந்து, எனக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று சொல்வது, மத்தியை அமைச்சரவையை தேர்வு செய்யும் மோதியை அவமதிப்பது போலானதுதான்! என்கின்றனர்.
இந்நிலையில், அருண் ஜேட்லி பெயரில் வெளியான கடிதத்தில் அருண் ஜேட்லியின் கையெழுத்து இல்லை என்றும், இது அவர் வெளியிட்ட கடிதம் தான் என்பதை எப்படி நம்புவது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.