
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டரீதியான சுதந்திரம் உறுதி செய்யப்படும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவேசி பேசி உள்ளார்.
பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து, எதிர்த்து வந்தவர் ஓவேசி. இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் இருந்து 4வது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓவேசி, மோடி கோயிலுக்கு போனால், நாம் மசூதிக்கு போவோம். மோடி குகைக்கு சென்று அமர்ந்தால், இஸ்லாமியர்களாகிய நாம் மசூதியில் தொழுகை நடத்துவதை நினைத்து பெருமைபடுவோம்.
300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இந்தியாவில் அரசியலைப்பு சட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பா.ஜ., பெற்ற 300 இடங்களைக் கொண்டு எங்களின் உரிமைகளை பறிக்க முடியாது.
இந்திய சட்டம், அரசியலமைப்பின் படி நாங்கள் எங்களின் மதத்தை பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீர்கள்.
300 இடங்களை வென்று விட்டதால் நாட்டின் பிரதமர் அவர் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அது நடக்காது.
ஓவேசி இந்தியாவிற்காக போராடுவான் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்றார்.
தொடர்ந்து இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பேசிய அவர், வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதையும், 40 அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதையும் ஏற்க முடியாது.
இஸ்லாமில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் சாத்தானின் போதனைகளை பின்பற்றுகிறார்கள். இஸ்லாமை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



