
சால்வைக்கு பதில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்க ஊக்குவித்த தெலுங்கானா பாஜக எம்.பி….!
பொதுவாக தேர்தல் வெற்றி என்பது மிகவும் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுவதே வழக்கம்.
வெற்றி பெற்ற தலைவர் மற்றும் கட்சியின் அலுவலகங்களை ஆதரவாளர்கள் சூழ்ந்துவிடுவார்கள்.
பரிசுகள், பொக்கே, மாலை, சால்வை, ஸ்வீட் பாக்ஸ் போன்றவற்றை குவிப்பார்கள். ஆனால் பாஜகவின் எம்பி ஜி கிஷன் ரெட்டி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.
17-வது மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் வெற்றிபெற்ற கிஷன் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மே 27-ம் தேதி ட்விட்டரில் ஒரு பதிவிட்டார்.
மேலும் தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வைகளும் போக்கேகளும் தருவதற்கு பதிலாக நோட்டுபுத்தகங்களை வழங்குமாறு தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த நோட்டுப்புத்தகங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கிஷனின் பதிவு பலரது பாராட்டைப் பெற்றது. தேவையிருக்கும் மாணவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்காக நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கதைப்புத்தகங்களுடன் எண்ணற்ற கட்சிப் பணியாளர்கள், ஆதரவாளர்கள், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் போன்றோர் எம்பி அலுவலகத்தில் திரண்டனர்.
புதிய எம்பி இதுவரை 8,000 புத்தகங்களை சேகரித்துள்ளதாக ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
புதிய கல்வியாண்டு துவங்கியதும் இந்த நோட்டுப்புத்தகங்கள் தெலுங்கானாவில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கிஷன் தெரிவித்தார்.
ஹைதராபாத்தின் பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா என்கிற இளைஞர் அமைப்பின் தலைவரான ராஜேஷ் குமார் அவர்களும் கிஷனின் முயற்சியில் பங்களிக்க எம்பியின் இல்லத்திற்குச் சென்றார்.
”ஒவ்வொரு தலைவரும் இவரை முன்மாதிரியாகக் கொண்டு ஏழைகளுக்கு உதவ இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று ராஜேஷ் குறிப்பிட்டதாக ’தி நியூஸ் மினிட்’ தெரிவிக்கிறது.
மாணவா்களின் படிப்பிற்கு அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் செலவிட இயலாத சூழல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
மாணவா்கள் புத்தகங்கள் இல்லாத காரணத்தால் படிப்பை கைவிடும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஹைதராபாத்தின் ஆம்பெர்பெட் பகுதியில் மூன்று முறை எம்எல்ஏ பதவி வகித்த கிஷன் இத்தகைய முயற்சியில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவின் 17 தொகுதிகளில் பாஜக நான்கு தொகுகளில் வென்றுள்ளது. கிஷன் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தலசானி சாய் கிரணை எதிர்த்து போட்டியிட்டு 62,114 வாக்கு வித்தியாசத்தில் செகந்திராபாத் தொகுதியை வென்றார்.


